63 நாயன்மார்கள்

திருத்தொண்டர் தொகை | thiruthondar thogai

திருத்தொண்டர் தொகை

தில்லைவாழ் அந்தணர் சருக்கம்

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்!
  திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்!
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்!
  இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்!
வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்!
  விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்!
அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்!
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே!!

இலைமலிந்த சருக்கம்

இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கு அடியேன்!
  ஏனாதி நாதன்தன் அடியார்க்கும் அடியேன்!
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற்கு அடியேன்!
  கடவூரில் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்!
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்!
  எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்!
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற்கு அடியேன்!
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.!!

மும்மையால் சருக்கம்

மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்!
  முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்!
செம்மையே திரு நாளைப் போவாற்கும் அடியேன்!
  திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்!
மெய்மையே திருமேனி வழிபடா நிற்க!
  வெகுண்டு எழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த!
அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கும் அடியேன்!
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.!

திருநின்ற சருக்கம்!

திரு நின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
  திரு நாவுக் கரையான்றன் அடியார்க்கும் அடியேன்
பெரு நம்பி குலச் சிறைதன் அடியார்க்கும் அடியேன்
  பெரு மிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
  ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்
அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.!!

வம்பறா வரிவண்டு சருக்கம்

வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
  மதுமலர்தல் கொன்றையான் அடியலால் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
  ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
  நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.!!

வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்

வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
  மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
  செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க்கடியேன்
கார்கொண்ட கொடைகழறிற்று அறிவார்க்கும் அடியேன்
  கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்
ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.!!

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்

பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
  பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழற்கு அடியேன்
மெய்யடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன்
  விரிதிரை சூழ் கடல்நாகை அதிபத்தற்கு அடியேன்
கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
  கழற்சத்தி வரிஞ்சையர் கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.!!

கறைக்கண்டன் கழலடி சருக்கம்

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண்டிருந்த
  கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
  நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித்
  தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.!!

கடல்சூழ்ந்த சருக்கம்

கடல்சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
  காடவற்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல்சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
  மன்னவனாம் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன்
புடைசூழ்ந்த புலியதன்மேல் அரவாட ஆடி
  பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல்சூழ்ந்த வேல்நம்பி கோடபுலிக்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.!!

பத்தராய்ப் பணிவார்கள் சருக்கம்

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
  பரமனையே பாடுவோர் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
  திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன்
  முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.!!

மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
  வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க்கடியேன்
  திரு நீல கண்டத்துப்பாணணார்க்கு அடியேன்
என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
  இசைஞானி காதலன் திரு நாவலூர்க் கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார்
  ஆரூரன் அம்மானுக்கு அன்பர் ஆவாரே.!!